கடலூர்,டிச.2- கடலூரில் புயல் மழையை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 80 பேர் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் சென்னை ஆவடியில் இருந்து கடலூர் வந்தனர். இதில் 25 பேர் கொண்ட ஒரு குழுவினர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். தற்போது ஆய்வாளர் ரமேஷ் தலை மையில் 55 பேர் கொண்ட 2 குழுவினர் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்கியுள்ளனர். தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதையொட்டி மீட்பு படையை சேர்ந்த அனைவரும், படகு மீட்பு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில், ஆட்சியர் எந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்தினாலும் அந்த இடங்களுக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.