districts

img

சிதிலமடைந்த இருளர் குடியிருப்புகள்: எம்எல்ஏ ஆய்வு

கிருஷ்ணகிரி, ஜன. 12- பர்கூரில் உள்ள எம்ஜிஆர் நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருளர் மக்களுக்காக 35 தொகுப்பு வீடுகள் தமிழக அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் மேற்கூரைகள் முழுவதும் சிதிலமடைந்து, சுவரின் காரைகள் பெயர்ந்தும், கீறல் விழுந்தும் காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் ஒழுகும் நிலை உள்ளது. அச்சத்துடனே மக்கள் உறங்க வேண்டியுள்ளது.  இங்கு ஒரே வீட்டில் 6க்கும் மேற்பட்டவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர். இந்த காலனியில் கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே பர்கூர் எம்ஜிஆர் நகர் இருளர் காலனி குடியிருப்புகளை சீரமைத்துத் தரக்கோரி பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மதியழகன் சேதமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு, உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.