சென்னை,ஜூன் 11-
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த 1 ஆம் தேதி பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் தேனிலவுக்காக இந்தோனேசியா நாட்டிலுள்ள பாலி தீவுக்கு சென்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலித்தீவிலுள்ள கடலில் மோட்டார் படகில் சென்றபோது தவறி விழுந்ததில் தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து சென்னையிலுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்றுள்ளனர். இதற்கிடையே புதுமண ஜோடி போட்டோ ஷூட் எடுத்தபோது கடலில் தவறி விழுந்து இறந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தன்று விபூஷ்னியா- லோகேஸ்வரன் இருவரும் உற்சாகத்துடன் போட்டோ ஷூட்டுக் காக கடலில் மோட்டார் படகில் சென்றுள்ளனர். அப்போது வேகமாக திரும்பியபோது படகு கடலில் கவிழ்ந்தது. இதில் சிக்கிய புதுமண தம்பதி கடலில் மூழ்கி இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலில் மூழ்கிய லோகேஸ்வரனின் உடல் வெள்ளிக்கிழமையும், விபூஷ்னியாவின் உடல் சனிக்கிழமையும் மீட்கப்பட்டது. பலியான ஜோடியின் உடலை சென்னை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து நேரடி விமானம் இல்லை. எனவே உடல்கள் மலேசியா வழியாக சென்னை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனால் 4 அல்லது 5 நாட்கள் வரை ஆகலாம் என்று உறவினர்கள் தெரிவித்துள் ளனர். இது தொடர்பாக இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.