கிருஷ்ணகிரி,நவ.23- கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தின் சார்பில் 30 ஆம் ஆண்டு விழா ஓசூர் மாநகராட்சி மத்திகிரி அருகே உள்ள டைட்டன் டவுன்ஷிப் கேடிடிஏ வளாகத்தில் நடைபெற்றது. காது கேளாதோர் அறக்கட் டளை தலைவர் சுரேஷ் பாபு வரவேற்றார். மதர் இந்தியா அமைப்பின் ஓசூர் நிறுவனர் சிஇஓ துரைராஜ் துவக்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெய வேல் சிறப்புரையாற்றினார். சங்க கூட்ட மைப்பின் தலைவர் ரமேஷ் பாபு கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் பேசினர். தமிழ்நாடு காது கேளாத பெண்கள் சங்கத்தின் நிறுவனர் காயத்ரி மோகன் நன்றி கூறினார். தமிழ்நாட்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளிக்கூடங்களில் சைகை மொழிச் சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் துறை அரசு அலுவலகங்களில் வழங்கும் காது ஒலி வாங்கி கருவிகள் தரமான, துரு ப்பிடிக்காத, நல்ல கருவிகளை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.1500 வழங்குவதை 6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 1000 உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களில் மகளிர் உரிமைத் தொகை பெற வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதன.