கடலூர், ஜூன் 14-
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியிலிருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது. இந்த ஏரியிலிருந்து தினசரி சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது கோடை வெயில் முடிந்த நிலையிலும் குறையாத வெப்பத்தின் தாக்கத்தால் வீராணம் ஏரியில் நீரின் அளவு குறைந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். மேலும் சென்னைக்கும் தற்போது குறைந்த அளவு தண்ணீர் வருகிறது.
இந்நிலையில், வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் சென்னைக்கு அனுப்பும் குடிநீர் சுகாதாரமாக அனுப்பப்படுகிறதா என்ற கேள்வி பொதுமக்கள் எழுந்துள்ளது.
ஏரியின் கரையோரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.