districts

img

ராக்கெட் வேகத்தில் உயரும் சிலிண்டர் விலை: மக்களுக்கு பேரிடி!

சென்னை,மார்ச் 26- வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு பெறுவது என்பது இப்போது எளிமையாக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பணம் கொடுத்து கியாஸ் சிலிண்டர் வாங்குவதுதான் கஷ்டமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். அந்த அளவுக்கு கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து, இப்போது 1,000 ரூபாயை நெருங்கிவிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு, வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு பெறுவது என்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்காக, பதிந்து வைத்து பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும். எம்.பி.க்கள் கையெழுத்து போட்டால், கியாஸ் இணைப்பு உடனே கிடைக்கும் என்பதற்காக, அவர்களின் பின்னால் சுற்றிய நினைவுகளும் பலருக்கு இன்னும் மறந்திருக்காது. பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே அப்போது கியாஸ் அடுப்பு இருந்தது. ஆனால், ஏழை-எளிய, நடுத்தர மக்களின் வீடுகளில் விறகு அடுப்புதான் இருந்தது. சமையல் செய்யும் போது, குபுகுபுவென எழும் கரும்புகை, நீண்ட நேர வேலை, பாத்திரங்கள் கரிப்பிடித்தல் என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலேயே ஒவ்வொரு நாளும் குடும்ப தலைவிகளுக்கு கடந்தது. மழை காலங்களில் விறகை தண்ணீர் படாமல் பாதுகாத்து வைப்பதே கடினமான வேலையாக இருக்கும். கியாஸ் இணைப்பு பெறுவது எளிமையாக்கப்பட்ட பிறகு, பட்டிதொட்டி எங்கும் உள்ள வீடுகளில் கியாஸ் அடுப்பு நுழைந்துவிட்டது. இன்றைக்கு கிராமம் முதல் நகரம் வரை அனைத்து வீடுகளிலும் கியாஸ் அடுப்பு இருக்கிறது என்றே சொல்லலாம். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வீடுகட்டும்போது கியாஸ் அடுப்பு வைப்பதற்கு ஏற்றவாறே சமையல் அறையை வடிவமைக்கின்றனர்.

இப்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து செல்வதை பார்க்கும்போது, மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது விறகு அடுப்புக்கு போகலாம் என்று குடும்ப தலைவிகள் நினைத்தாலும், அதற்குரிய கட்டமைப்பில் இப்போதைய வீடுகள் இல்லை. விறகு விற்பனை செய்வதற்கான கடைகளும் இல்லை. இதனால், வேறு வழியில்லாமல், அதிக விலை என்றாலும் கியாஸ் சிலிண்டரைத்தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் குடும்ப தலைவிகள் உள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் சிலிண்டர் விலை மாற்றி அமைப்பதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். அதன்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒன்றியத்தில் ஆட்சி செய்தபோது கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.352.45 என்று இருந்தது. அதன் பின்னர், பாஜக ஆட்சிக்கு வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக விலை அதிகரித்து கொண்டே வந்தது.  2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி நிலவரப்படி, ரூ.594.50 என்று இருந்தது. அதனைத் தொடர்ந்தும் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே காணப்பட்டு வருகிறது. இடையிடையே சர்வதேச சந்தையில் விலை பெருமளவு குறைந்தாலும் கியாஸ் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 22 ஆம் தேதி விலை உயர்வுக்கு பிறகு, ஒரு சிலிண்டரின் விலை ரூ.965.50 என்று இருக்கிறது. இதுதான் வீட்டு உபயோக சிலிண்டரின் அதிகபட்ச விலையாக உள்ளது. இதன்படி பார்க்கும் போது, கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 5 ஆண்டு கால இடைவெளியில் மட்டும் சிலிண்டருக்கு ரூ.371 வரை உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த ஆண்டு மட்டும் 180 ரூபாய் 50 காசு அதிகரித்திருக்கிறது.  தற்போதுள்ள சிலிண்டரின் விலையான ரூ.965.50 உடன், சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வரும் நபருக்கு வழங்கும் ‘டிப்ஸ்’ தொகையையும் சேர்த்தால், 1,000 ரூபாயை கடந்துவிடுகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இந்த சிலிண்டர் விலை உயர்வு பேரிடியாக உள்ளது.