புதுச்சேரி, நவ.5- காரைக்கால் மீனவ கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று மீன்வளத்துறை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் 2019 அறிவிக்கையின் படி மீனவர் கிராமத்தில் அளவிட்டு நிலங்களை கையகப்படுத்தும் புதுச்சேரி அரசின் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும். முழுமை பெறாத கடற்கரை ஒழுங்கு முறை மண்டலம் வரைவு மீது நடைபெற உள்ள கருத்துக்கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகளான, தட்டுப்பாடுயின்றி சுத்தமான குடிநீர், வீடற்ற மக்களுக்கு குடிமனைப்பட்டா, தடையற்ற மின்சாரம், தரமான சாலைகள் என அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் காரைக்கால் மாவட்ட செயலாளர் தமீம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாநில குழு உறுப்பினர்கள் வின்சென்ட், துரை ராஜ், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் செயலாளர் அருண் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மீன்வளத்துறை அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.