ராணிப்பேட்டை டிச 28 - ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு துவக்கி வைத்தார். வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி நிறைவு செய்து பேசினார். மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் டி.சந்திரன், தா.வெங்கடேசன், எல்.சி.மணி, பி.ரகுபதி, என்.ரமேஷ், எஸ்.செல்வம், ஆர்.மணிகண்டன், ஏபிஎம்.சீனிவாசன், ஏ.தவராஜ், ஆர்.திலகா, எம்.கோவலன் மற்றும் பலர் உரையாற்றினர். கலவை வட்டம் தோனிமேடு, வெள்ளம்பி கிராமங்களில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பத்தாயிரம் நெல் மூட்டைகளுக்கும் உடனடியாக பணம் பட்டுவாடா வேண்டும், மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் முப்பதாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தனி யாக தொழிலாளர் நல வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும், நெமிலி - நாகவேடு இடையே மேம்பாலம் அமைக்க வேண்டும், நெமிலி தாலுகாவில் அருந்ததியர் பகுதி, ஜெ.ஜெ.நகர் பகுதி மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் உள்ள பழங்குடி இருளர் இன மக்களுக்கு சாதிச் சான்று, மனைப்பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். பனப்பாக்கம் பகுதியில் ஜவுளி பூங்கா ஏற்படுத்த வேண்டும், ஆற்காடு, நெமிலி வட்டங்களில் அரசு கலைக் கல்லூரி அமைத்து கொடுக்க வேண்டும், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.