districts

img

துபாய் வேலைக்கு சென்றவர்கள் துன்புறுத்தல்

கடலூர், நவ.23- துபாய் வேலைக்கு சென்றவர்கள் துன்புறுத்தப்படுவதால் அவர்களை மீட்டு வரவேண்டும் என்று கடலூர் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த நஞ்சமகத்து வாழ்க்கை வடக்கு சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.சிவரஞ்ஜனி. இவரது கணவர் அரவிந்த் எலக்ட்ரீசியன் ஹெல்பர் வேலைக்கு துபாய்  செல்ல டிராவல்ஸ் நிறுவனத்திடம் ரூ. 65 ஆயிரம் கொடுத்துள்ளனர். பிறகு, அக்.23 அன்று சென்னையில் இருந்து துபாய்க்கு சென்றார். ஆனால், அவருக்கு எலக்ட்ரிஷன் வேலை கொடுக்கவில்லை. மாறாக பீட்டர் வேலை கொடுத்துள்ளனர். மேலும்  60 கிலோ கம்பியை தூக்க வேண்டுமென கட்டாயப்படுத்தி உள்ளனர். தன்னால் முடியாது என கூறிய போது அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும், சாப்பாடு கொடுக்காமல் துன்புறுத்தி வருவதாகவும் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து மயிலாடுதுறை ஆர். கே. முத்து டிராவல்ஸ் நிறுவன அதிகாரிகளிடம்‘ சிவரஞ்ஜனி கேட்டபோது இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தான் அழைத்து வர முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோரை அரவிந்த் மனைவி சந்தித்து மனு கொடுத்தார். அதில், தனது கணவரை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதே பகுதியை சேர்ந்த ஜி.சுகன்யா என்பவரும் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில், என்னுடைய சகோதரர் சிலம்பரசன் துபாய்க்கு வேலைக்கு சென்ற இடத்தில் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.