கிருஷ்ணகிரி,செப்.26- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், ஜனஹள்ளி பேரூராட்சிக்குட்பட்டது என்.தட்டக்கல்,சென்றாயன் பட்டி, ஜெய்னுர். இந்த கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் மா, காய்கறி, காட்டு வெல்லாமை என விவசாயம் செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள மலைக் குன்றை சுற்றி ஆடு, மாடுகள் மேய்த்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலம் 1.5 ஏக்கரில் சிறிய பாறை மலைக் குன்றை வெட்டி கிரானைட் மற்றும் ஜல்லி கற்கள் எடுத்து செல்ல தனியாருக்கு சொந்தமான குவாரி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கான அனுமதி வழங்குவதற்கு முன்பு, மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் கிராம மக்களுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்பதற்கு கூட்டம் நடத்த வேண்டும். அதன் பிறகுதான் குவாரிக்கு அனுமதி கொடுப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். ஆனால், பெயரளவுக்கு அதுவும் அவசர கதியில் ஒரு கூட்டத்தை நடத்திய கனிமவளத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. முறைப்படி கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் குவாரி அமைக்க அனுமதி கொடுத்துள்ளதால் 4 கிராமங்களில் மக்கள் குடியிருக்கும் வீடுகள், தற்போது செய்து வரும் விவசாயம் அனைத்தும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே,அந்த தனியார் நிறுவனம் குவாரி அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், பெரும்பாலான மக்கள் பங்கேற்புடன் ஜனநாயக முறைப்படி கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பேச்சம்பள்ளி வட்டச் செயலாளர் சாமு தலைமையில் மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தமிழ்நாடு முதலமைச்சர், கனிம வளத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, மாவட்டக் குழு உறுப்பினர் இளவரசன், நகோஜன ஹள்ளி வார்டு உறுப்பினரும் வட்டக் குழு உறுப்பினருமான கடல் வேந்தன், மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் குண்டப்பா ஆகியோர் உடனிருந்தனர்.