சென்னை, டிச. 7 - சாலை அமைக்க அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்று குடியிருப்பு கேட்டு புதனன்று (டிச.7) துரைப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையையும் (இசிஆர்), பழைய மகாபலிபுரம் சாலையும் துரைப்பாக்கம் அருகே இணைக்கும் வகையில் 204 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கப்படுகிறது. 1.5 கி.மீ நீளமுள்ள இந்த சாலையில், பக்கிங்காம் கால்வாயின் மேல் 860 மீட்டர் நீளத்தில் பாலம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகள் முடிந்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துரைப்பாக்கத்திலிருந்து செல்லும் பாதையில் பக்கிங்காம் கால்வாய் அருகே அறிஞர் அண்ணாநகர் நகர் உள்ளது. இங்கு 34 வருடங்க ளாக வாழ்ந்து வரும் 16 வீடுகள் அகற்றப்பட உள்ளன. அந்த இடத்திற்கு நில மோசடி பேர்வழி கள் சிலர் பட்டா பெற்று , அரசின் இழப்பீட்டை பெற்றுள்ளனர். இதனால் அங்கு வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை இழப் பீட்டையும், மாற்று இடத்தையும் தர மறுத்து விட்டது. இதனை கண்டித்தும், பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்க வேண்டும், நிலமோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து துரைப்பாக்கத் தில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்க நல்லூர் பகுதிச் செயலாளர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜ குமாரி உள்ளிட்டோர் பேசினர்.