செங்கல்பட்டு, ஏப். 19- தஞ்சாவூரில் கொத்தடிமைகளாக இருந்த 16குடும்பங்களை சேர்ந்த 34 இருளர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப் பாக்கம் ஒன்றியம் மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்த செல்வராஜ், சித்ரா, வெங்கடேசன், வசந்தி, ராஜா, பவானி தேவி, சேகர், விஜி,மகாலட்சுமி சுரேஷ், சக்திவேல், முத்து, குட்டி, மீனா, சந்துரு, வெண்ணிலா உள்ளிட்ட 16குடும்பங் களை சேர்ந்த குழந்தைகள் உட்பட 34பேர் மீட்கப்பட்டுள்ளனர். கரும்பு வெட்டும் தொழிலுக்காக கடலூர் மாவட்டம், பண்ருட்டி ரயிலடி திருவீதியை சேர்ந்த நாகராஜ் என்ற மேஸ்திரி மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா மதூர் கிராமத்திற்கு வந்து அதிக கூலி, தங்கும் வசதி, நல்ல உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறி கரும்பு வெட்டும் கூலி தொழிலுக்கு கடந்த நவம்பர் மாதம் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் கடந்த ஐந்து மாதங்களாக கடும் வெயிலில், குறிப்பிட்ட வேலை நேரம் என்றில்லாமல் காலை முதல் இரவு வரை கடுமையாக வேலை செய்ய நிர்பந்தித்துள்ளனர். எந்தவித அடிப் படை வசதிகளும் இல்லாமல் தங்க வைத்து வேலை வாங்கியுள்ளனர். ஏதாவது காயம் பட்டாலோ, உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல். இரவில் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் தராமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் திறந்த வெளியில் தங்க வைத்துள்ளனர். ஊருக்கு செல்வதற்கு, வெளியில் செல்வதற்கோ, ஞாயிற்றுக் கிழமை களில் கூட விடுமுறை இல்லாமல் வேலை வாங்கி வந்துள்ளனர். இந்த ஐந்து மாத காலகட்டத்தில் உணவிற்காக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு முப்பது ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். கடுமையாக திட்டியும், மிரட்டியும் வேலை வாங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று இரவோடு இரவாக பாதிக்கப்பட்ட இருளர் மக்கள் வேலை செய்த ஏலக்குறிச்சி, மாதா கோவில் சந்து அருகில் உள்ள கரும்பு தோட்டத்திலிருந்து முதலில் 16 பேர் மட்டும் தப்பி வந்துள்ளனர். மேலும் 15பேர் வேறு வழியாக தப்பித்து வந்துள் ளனர். மேலும் அங்கு வேலை செய்த சுரேஷ் என்பவரின் மகன்கள் சக்தி வேல் (வயது 13), முத்து (15) மற்றும் ஆணைகுளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் சித்ரா (16) உள்ளிட்ட மூவரையும் பிணைக் கைதி யாக பிடித்து வைத்ததாக கூறப்படு கிறது. தற்போது பாதிக்கப்பட்ட இருளர் மக்களை மீண்டும் வேலைக்கு வரும் படியும் இல்லாவிட்டால் வாங்கிய பணத்திற்கு வட்டியோடு சேர்த்து திருப்பி தரும்படியும் தகாத வார்த்தை களால் திட்டுவதோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக தெரிகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இருளர் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வினை வழங்கினர். அம்மனுவில் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு கொத்தடிமை முறையிலிருந்து முழுமையாக விடுவித்து வாங்கிய முன்பணத்திற்கும் பலமடங்காக உழைத்த கூலியையும் பெற்று தர நடவடிக்கை எடுத்திட வேண்டும், நிரந்தரமாக தங்குவதற்கு ஒரு இடம், குழந்தைகளுக்கு கல்வி வசதி, ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் குடும்ப கார்டு உள்ளிட்ட அனைத்து அரசின் நலத்திட்டங்களையும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட இருளர் மக்களை மிரட்டிவருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயந்தி, பீப்பிள் வாட்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர் உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.