சென்னை, அக். 7- மணலி, எண்ணூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் துறைமுக நிதி உதவியுடன் ரூ.2.92 கோடியில் கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டினார். மணலி பாடசாலை தெருவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாத நிலையில் புதிய வகுப்பறை கட்டடிங்களை கட்டித் தருமாறு மாணவர்கள், பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை அணுகினார். அவர்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியில் இந்த கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர ஒப்புக் கொண்டனர். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிதி மற்றும் காமராஜர் துறைமுக சமூக பொறுப்புணர்வு திட்ட நிதி உதவியுடன் ரூ. 2.20 கோடியில் கழிப்பறை, மாடிப்படிகளுடன் கூடிய 8 வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. அதேபோல் எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி யில் தற்போது சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிதி மற்றும் காமராஜர் துறைமுக சமூகப் பொறுப்புணர்வு நிதி உதவியுடன் ரூ. 71.80 லட்சம் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கான கட்டடப் பணிகளை வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர் (திரு வொற்றியூர்), எஸ்.சுதர்சனம் மாதவரம், மண்டலக் குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கே.பி.சொக்கலிங்கம், மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல அலுவலர்கள் நவேந்திரன், கோவிந்தராஜ், காமராஜர் துறைமுக அதிகாரிகள் கருப்பையா, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.