districts

img

எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை மூடுக

சென்னை, பிப்.28- உயிருக்கு ஆபத்தான எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 33 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எண்ணூர் அடுத்த பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்திலிருந்து டிச 26அன்று இரவு ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து உயிருக்கு ஊறு விளைவிக்கும்  கோரமண்டல் உரத்  தொழிற்சாலையை இழுத்து மூட வலியுறுத்தி டிச 27ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து போராடி வரு கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் அம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அந்த தொழிற் சாலையை நிரந்தரமாக மூட வலி யுறுத்தி 33 கிராம எண்ணூர் மக்கள்  பாதுகாப்பு குழு சார்பில் செவ்வா யன்று (பிப். 27) கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புக்குழு உறுப் பினர்கள் அ.பகத்சிங், பார்த்தசாரதி, சேகர், சவுந்தர்ராஜன், தமிழ்ச்செல்வன்,  லைனல், மதி, குமரவேல், பாலா, வெங்கடேஷ், சுரேஷ் உள்ளிட்ட கிராம  மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.   இதுகுறித்து நிர்வாகிகளில் ஒரு வரான பார்த்தசாரதி கூறுகையில், உயிருக்கு ஆபத்தான எண்ணூர் கோர மண்டல் உரத் தொழிற்சாலையை மூட  வலியுறுத்தி அறவழியில் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆலையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை  மாநில அரசு முழுமையாக பதிவு  செய்யாமல், சட்டரீதியான நடவடிக்கை  எடுக்க பரிந்துரை செய்து ரூ 5.92 கோடி அபராதம் விதித்துள்ளது.  67 ஆண்டுகளாக இயங்கும் ஒரு தொழிற்சாலையில் பாதுகாப்பு முன்  ஏற்பாடுகள் முறையாக அமைக்கப் படவில்லை என்பதை விதிமீறல் என சுட்டிக்காட்டி தண்டிக்காமல், இனிமேலாவது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று பூசி மெழுகும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை கண்டிக்கிறோம் . சட்டமன்றத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி எண்ணூர் அமோனியா கசிவு பற்றிய கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக,  சிபிஐ, மதிமுக, காங்கிரஸ் பா.ம.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்  எண்ணூர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். எனவே உயிருக்கு ஆபத்தான இந்த உரத் தொழிற்சாலையை உடனடியாக மூட அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.