ராணிப்பேட்டை, ஜூன் 21–
பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அரக்கோணம் நகராட்சி தலைவர் வீட்டை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் சுமார் 100 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் சிலரை தூய்மை பணியில் ஈடுபடுத்தாமல் நகராட்சி அலுவலக பணிகளுக்காக மட்டும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து. நகர மன்றத் தலைவர் லட்சுமி பாரி வீட்டை சங்க தலைவர் ஏபிஎம். சீனிவாசன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து சங்க தலைவர் ஏபிஎம். சீனிவாசன் கூறுகையில், “தூய்மை பணிக்கு அனைத்து பல்வேறு சாதியை சேர்ந்தவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இருப்பினும் தூய்மை பணியாளர்கள் மத்தியில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது” என்றார்.
குறிப்பாக, சிலரை மட்டும் தூய்மை பணியில் ஈடுபடுத்தாமல் அலுவலக பணிகள் கொடுக்கிறார்கள். மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு கப்பம் கட்டும் நிலை இங்கு உள்ளது. எனவே, தூய்மை பணியாளர் பணிக்கு நியமித்த அனைவரையும் தூய்மை பணியில் ஈடுபடுத்த வேண்டும். தூய்மை பணியாளர்கள் எல்லோருக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, நகர மன்றத் தலைவர் லட்சுமி பாரி தூய்மை பணியாளர் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில், யாரிடமும் பாரபட்சம் காட்ட வில்லை என்றும் இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.