திருவள்ளூர், டிச. 24- யாரும் பொறுப்பேற்காத சாலையை, மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் பொறுப்பேற்று சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு வலியுறுத்தியுள்ளது. மீஞ்சூர் அருகில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான காமராஜர் துறைமுகத்தில் கப்பல் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.காமராஜர் துறைமுகத்திற்கு சென்று வரும் சாலை சுமார் 5 கி மீ வரை மிகவும் சீரழிந்து உள்ளது. நடந்து செல்ல கூட முடியாத நிலை உள்ளது. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி டிச.3 அன்று சாலை மறியல் நடை பெற்றது. இதனை தொடர்ந்து டிச.6 அன்று பொன்னேரி கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதுவரை சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு வரை பொது மக்கள் பயன்படுத்தும் காமராஜர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் மீஞ்சூர் பிடிஒ அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ரவி வெள்ளி யன்று மனு அளித்தனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.நரேஷ்குமார், கிளை நிர்வாகிகள் காஞ்சனா, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.