புதுச்சேரி,டிச.22- புதுச்சேரி நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகள் விற்பனை குழு பிரதிநிதிகளுக்கான தேர்தலுக்கு சிஐடியு உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகள் விற்பனை குழு (வெண்டிங் கமிட்டி) உறுப்பினர்கள் 12 நபர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தல் வருகிற ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள புதுச்சேரி நகராட்சியின் வருவாய் பிரிவு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 22) நடைபெற்றது. இத்தேர்தலில் சிஐடியு புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 12 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை நகராட்சியின் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தனர். முன்னதாக, ஆம்பூர் சாலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். இதில் சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன் உட்பட திரளான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.