விழுப்புரம், மார்ச் 25- விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அதற்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பெரிய கொழு வாரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா வருகிற 5 ஆம் தேதி நடக்கிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் 100 பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி அதற்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன்.பி.நாயர், மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அப்போது அந்த பகுதியில் சாலை வசதி, குடி நீர் வசதி, மின்விளக்கு வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், பொது விநியோக கடை, மரக்கன்றுகள் வளர்த்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து உட்கட்ட மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி களை விரைந்து முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, திண்டிவனம் நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல்துறை, வரு வாய்த்துறை, பொதுப் பணித்துறை, மகளிர் திட்டம், நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் கலந்துக்கொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் குறித்தும், பாதுகாப்பு பணிகள் குறித்தும் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.