சென்னை, ஏப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 6 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாள் நடைபெற்ற பேரணி - பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி 70 ஆவது வட்ட கிளைச் செயலாளராக இருந்த பி.அசோகன் (59) என்பவரும் பங்கேற்றார். பேரணி, பொதுக்கூட்டம் முடிந்து தங்கியிருந்த அறைக்கு சென்ற அவர், நள்ளிரவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சக தோழர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் செவ்வாயன்று கண்ணூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடல் புதனன்று சென்னை பெரம்பூர் மடுமா நகர் சின்னக் குழந்தை தெரு எண். 35 இல் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் மாலை 4 மணியளவில் இறுதி நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.