districts

img

அரசு பள்ளி புனரமைப்பு பணியிலும் முறைகேடு: சிபிஎம் தலையீட்டால் ஒப்பந்தாரர் மாற்றம்

காஞ்சிபுரம், பிப்.8- காஞ்சிபுரம் மாவட்டம் குருவி மலை நடுநிலைப் பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பூச்சு விழுந்த நிலையில், புனரமைப்பு பணியிலும் முறைகேடு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பெற்றோர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரரை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டார். காஞ்சி புரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவிமலை பகுதியில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயின்று வரும் நிலையில் ஏற்கனவே இருந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் ரூ.63 லட்சத்தில் கட்டப்பட்டது. கடந்த ஜூலை மாதம் பள்ளி மாணவர்கள் காலை வணக்கத்திற்கு சென்று இருந்த நிலையில், ஒரு வகுப்பறையின் மேல் கூரை பூச்சு மின்விசிறியுடன் பெயர்ந்து மாணவர்களின் இருக்கை யின் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக மாணவர்கள் தப்பினர் . இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பெற்றோர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் மீது புகார் மனு ஒன்றை காணொளி ஆதாரத்துடன் அளித்தனர். மேலும் சம்மந்தபட்ட பள்ளி கட்டுமான ஒப்பந்ததாரரை கைது செய்ய வேண்டும். ஒப்பந்த பணத்தை ஒப்பந்ததாரரிடமிருந்து திரும்ப பெற வேண்டும். பள்ளியின் உறுதித் தன்மை ஆய்வு செய்து மறு கட்டுமானப் பணி மேற்கொள்ள வேண்டும். என கோரிக்கைகள் வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் புனரமைப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளும் வரை பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் பயில வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் மேற்கூரையின் அடிப்பகுதி பூச்சு முழுவதையும் பெயர்ந்து சுத்தம் செய்து விட்டு பூச்சு செய்யப்படுவதற்கு பதிலாக நெருக்கமான புள்ளிகள் இட்டு (Closer Hacking) இரண்டு முறை பட்டி பார்த்து வண்ணபூச்சு செய்யப்பட வேண்டும். மேற்கூரையின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தட்டு ஓடுகள் அதிக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளதால் அவற்றை முழுவதும் அகற்றி விட்டு மீண்டும் சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். பள்ளி கட்டிடத்தில் அமைந்துள்ள படிக்கட்டு களின் பூச்சு வேலை சரிவர செய்யப்படாமல் பழுதடைந்த நிலை யில் உள்ளதால் பழுதடைந்த பூச்சு வேலையினை முழுவதுமாக நீக்கி விட்டு புதியதாக பூச்சு வேலை செய்ய வேண்டும். பள்ளி கட்டிடத்தின் பல்வேறு பகுதியில் சிறு விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை சரிசெய்யப்பட வேண்டும். என துணை வட்டாட்சியர் அலுவலர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி உத்தரவிட்டார்.  அதன்பின்னர் புனரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்றுவந்த நிலையில்,  அந்தபணிகளிலும் மிகுந்த முறைகேடுகள் நடைபெறுவதாக ஒப்பந்ததாரர் மீது  வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் பெற்றோர் கள் புகார் தெரிவித்தனர்.  அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா, பொறியாளர் சகுந்தலா ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் ஒப்பந்ததாரர் முறையாக பணிகளை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. உடனடியாக ஒப்பந்த தாரரையை மாற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பல்வேறு கோரிக்கை கள் வைக்கப்பட்ட நிலையில், ஒப்பந்த தாரரை மாற்றியும், அதேபோல அதே வளாகத்தில் மற்றொரு கட்டிடம் கட்டி வரும் ஒப்பந்ததாரரிடம் இப்பணிகளை மேற்கொண்டு முறையாக ஒப்படைக்க உத்தரவிடுவதாக கூறினார். மேலும் ஏற்கனவே இந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாருக்கு எந்தப் பணிகளும் வழங்க வேண்டாம் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு பரிந்துரை செய்து அவரை கறுப்பு பட்டியலில் வைக்க தெரிவித்துள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினரிடம் மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்தார். 63 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் இதுபோன்று புனரமைப்பு பணிகளிலேயே செல்லும் நிலையில் பல இடங்களில் வகுப்பறைகள் நடைபெற்று வருவதாக  சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் வி.சிவபிரகாசமும் பெற்றோர்க ளும் கவலை தெரிவித்தனர்.