சென்னை,ஜன,4- சென்னை எழும்பூர் வணிக வழக்குகள் நீதி மன்றத்தில் மின்பிரதியாக்கப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் மின்பிரதியாக்கப் பிரிவின் குழுத் தலைவர் நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா இதனை தொடங்கி வைத்தார். காகித அடிப்படையிலான வழக்குக் கோப்புகளை குறைப்பது இதன் முக்கிய நோக்கமாகும். புதுவழக்கு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதோடு ஏறத்தாழ 3 லட்சம் பழைய வழக்குகளின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க மின்பிரதிமயமாக்க பிரிவு ஈடுபட்டுள்ளது. இந்தச் செயல் திட்டத்தின்படி, வெகு சில ஆவ ணங்களைத் தவிர, மற்றவற்றை காகிதத்தில் பராமரிக்கவேண்டிய தேவை இருக்காது. இதனால் நீதிமன்றத்தில் போதுமான இடவசதி கிடைக்கும். மேலும் நீதிமன்ற ஆவணச் சேமிப்பை அணுகுவதில் உள்ள தடைகள் நேரகால விரயம் தவிர்க்கப்படும், ஆவணங்களை இனி தகவல் தொழில்நுட்ப வசதியுடன் விரைந்து தேடி கண்டுபிடிக்கமுடியும். இதற்கான டிஜிட்டல் தளத்தில் தேடுதல், மீட்பு, சேமிப்பு மற்றும் பேரிடர் கால மீள் உருவாக்கம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.