விழுப்புரம், ஜன. 29- விழுப்புரம் மாவட்டத்தில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், தகுதியற்ற 6 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட ஆணையை மாவட்ட ஆட்சியர் த.மோகன் ரத்து செய்து உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் அரசு வீடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பயனாளிகளின் நிலை குறித்த உண்மை நிலை மற்றும் தகுதியுள்ள பயனாளிகள்தானா? என்பதை அவ்வப்பொழுது ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட, ஆழியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, ஆழியூர் ஊராட்சிக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின்கீழ் 2022ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர்களுக்கு 23 வீடுகள், இதர பிரிவினருக்கு 10 வீடுகள் என மொத்தம் 33 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்த கள ஆய்வில் பூமா, சாமிநாதன், சுப்புராயன், பூங்காவனம், பத்ராசலம், ஆறுமுகம் ஆகிய 6 பயனாளிகளுக்கு சொந்த வீடு இருந்தும் தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விதிமுறைகளின்படி தகுதியற்ற அந்த 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீடு கட்டும் பணி ஆணையை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்த அலுவலர்கள் மீது அரசு விதிமுறைகளுக்குட்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க திட்ட இயக்குநருக்கும் உத்தரவிட்டார்.