districts

இடைத்தேர்தல்: இரட்டை இலை முடக்கத்தால் அதிமுகவினர் கலக்கம்

சென்னை,ஜூன் 30- அதிமுகவில் எடப்பாடிபழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9 ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர் கள் உள்ளிட்ட 34 பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டி யிடுபவர்களுக்கு அவர்களது சின்னங்கள் ஒதுக்கப்படும். அந்த வகையில் அதிமுக சார்பில் இந்த பதவிகளுக்காக போட்டி யிடும் நிர்வாகிகளுக்கு பார்ம் ‘ஏ’ மற்றும் பார்ம் ‘பி’ யில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டும். தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவங்கள் அதிமுகவினருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள்  சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். இதன் காரணமாக அதி முகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். சுயேட்சையாக போட்டியிடுவதால் அதிமுகவினர் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரே இல்லை: இபிஎஸ்
அதிமுக  ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தங்களின் ஜூன் 29ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், மகாலிங்கம் வழியாகப் பெறப்பட்டது. கடந்த ஜூன் 23 அன்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுவில் 1.12.2021 அன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கட்சி சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்றும் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.