districts

img

வேடந்தாங்கலில் வறட்சி: சொந்த நாடு திரும்பும் பறவைகள்

செங்கல்பட்டு, ஏப்.25- நீர் நிலைகள் வற்றி வருவதால் வேடந் தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்த வெளிநாட்டு பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேடந்தாங்கலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பறவைகள் சரணாலயம்  உள்ளது. சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா, சைபிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு  அயல் நாடுகளிலிருந்து கூழைக்கடா, அரிவாள் மூக்கன், வர்ண நாரை, மிளிர் உடல்  அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, சாம்பல் நிற கொக்கு, நத்தக்குத்தி நாரை, கரண்டி வாயன், குருட்டு கொக்கு, வக்கா உள்ளிட்ட 26 வகையான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் மே, ஜூன் மாதங்களில் தங்கள் நாட்டுக்கு திரும்பி விடுவது வழக்கம்.  இந்த ஆண்டு சரணாலயத்திற்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இனப்பெருக்கத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில்  ஜூன், ஜூலை மாதங்கள் திரும்பி செல்லும் பறவைகள் கோடை வெயிலின் தாக்கத்தாலும் அருகில்  உள்ள நீர்நிலைகள் வறண்டு வருவதால் இப்பொழுதே தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்கின்றன. இது பறவைகள் ஆர்வலர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.