districts

img

புது கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

திருவள்ளூர், ஜூன் 22-

     புதுகும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சிறுபுழல்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட சுற்றியுள்ள  கிராமங்களிலிருந்து ஏழை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

    கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் புதுகும்மிடிப்பூண்டி அரசு மேனிலைப்பள்ளியில் 4 ஆசிரியர் பற்றாக்குறையுடன் செயல்பட்டது. அதன் விளைவு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 68 விழுக்காடாக  சரிந்தது. இந்த கல்வியாண்டில் 2023 - 24 ல், 7 பட்டதாரி ஆசிரியர்களும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 3 முதுகலை ஆசிரியர்கள்,  11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை  10 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

    32 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது 18 ஆசிரியர்களே உள்ளனர்.

     உடற்கல்வி ஆசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. போதுமான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி  விவசாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் புது கும்மிடிப்பூண்டியில் புதனன்று (ஜூன் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.இதில் பொதுப் பள்ளிகளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பு.ப.பிரின்ஸ்கஜேந்திரபாபு, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன்,  மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.பத்மா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஸ்வேதா,  வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன்,  பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் சுப்பிரமணி, ஆனந்தராஜ், முருகன், சிவகாமி, மாலதி, செல்வி ஆகியோர் பேசினர்.