ராணிப்பேட்டை, ஏப். 20 – அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு கொண்டுவரப்பட்டது பின்னர். தேர்தல் பொது பார்வையாளர் சுனில்குமார் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் ச. வளர்மதி, போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் முன்னிலையில் அறையில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறைக்கு சீல்வைக்கப்பட்டது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு மூன்று அடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் நிலையில் எல்லைப்பாதுகாப்பு படைவீரர்களும் இரண்டாம் நிலையில் தமிழ்நாடு காவல் சிறப்பு படையினரும் மூன்றாம் நிலையில் உள்ளூர் காவலர்களும் என மொத்தம் 150 காவலர்களை கொண்ட காவல் பாதுகாப்பு படையினர் ஷிப்ட் அடிப்படையில் 24 மணிநேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் வளாகத்தில் கண்காணிக்கப்படும் வீடியோ பதிவுகளை வேட்பாளர்கள் அவர்களின் முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கண்காணிப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.