சிதம்பரம், ஏப்.27- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு தொகுப்பு ஊழியர்களாக 209 பேர் பணியமர்த்தப்பட்டனர். அவர்களை 2 வருடத்திற்கு பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் 12 ஆண்டுகள் கடந்தும் அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. அவர்களுக்கு பணி நியமனத்தின் போது ரூ 1,500 மாத ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்த 6 ஆண்டுகளாக ரூ 5,000 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதனன்று தொகுப்பூதிய ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகம் முன்பு முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர் படங்களை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பதிவாளர் சீத்தாரமான் பேச்சுவார்த்தை நடத்தினார். துணைவேந்தர் வெளியூர் சென்றிருப்பதால், அவர் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.