சென்னை,ஏப்.12- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் மாதிரிப்பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினர் முகம்மது ஷாநவாஸ்,“ திராவிட மாடல் பள்ளி என்பது நவோதயா பள்ளிகளை போன்று ஒருசில பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அல்ல. மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் மாதிரி பள்ளிகள் என்ற அடிப்படையில் கட்டமைப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்”என்றார் தமிழ்நாட்டின் கல்வி முறையை உலகமே உற்று நோக்குவதாதல் கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சேலம் பெரியார் பல்கலை கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் சமூகநீதிக்கு எதிரான செயல்பாடுகள் அதிலும் குறிப்பாக இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவது மிகப்பெரிய சிக்கல் நீடிக்கிறது இட ஒதுக்கீட்டை பின்பற்ற மறுக்கிறார்கள். வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் எஸ்சி,எஸ்டி பிரிவினர் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டிருக்கிறது. சமூகநீதி மண்ணில் அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் இயங்கிவரும் உயர் கல்வி நிறுவனமான ஐஐடி மீது புகார் வராத நாளே இல்லை. அந்த நிறுவனம் தன்னாட்சி பெற்றது என்றாலும் நமது மாநிலத்தில் நமது வரிப்பணத்தில் இயங்கிவருகிறது அங்கு சமூக நீதிக்கு முரணான அத்தனை செயல்களும் அரங்கேறி வருகிறது. கேரள மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் இதுவரைக்கும் நீதி வழங்கப்படவில்லை. மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மீது சாதிப்பாகுபாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் ஒரு பேராசிரியர் பணியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதையும் ஷாநவாஸ் சுட்டிக்காட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசுப் பள்ளி ஒன்றில் ரமலான் நோன்பு இருந்த ஒரு மாணவனை உணவு உண்ணச் சொல்லி ஆசிரியர் வற்புறுத்தியது மிகப்பெரிய கொடுமை. சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சிறுபான்மையினர் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாமல் உள்ளதால் பழங்குடி, பட்டியலின, சிறுபான்மையினத்தின் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்பட்டு வருதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.