புதுச்சேரி,அக்.21- புதுச்சேரி வரலாற்றுச் சின்ன மாக திகழும் ஏ.எப்.டி., சுதேசி, பாரதி, பஞ்சாலைகளை திறந்து, நவீனமயமாக்கி, படித்த இளை ஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்று சிபிஎம் உழவர் கரை நகர மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. ஞாயிறன்று நடைபெற்ற மாநாட்டில் மூத்த உறுப்பினர் வி.ராமகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கையை வீர.அரிகிருஷ்ணன் தாக்கல் செய்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ், சீனிவாசன், சத்யா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். முன்னதாக சாமிப்பிள்ளை தோட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழ்ஒளி நினைவு ஜோதியை மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் பெற்றுக் கொண்டார். சாரம் ஜீவானந்தம் சிலையிலிருந்து நடைபெற்ற செந்தொண்டர் ஊர்வலத்தை மூத்த தலைவர் தா.முருகன் துவக்கி வைத்தார். நகரக்குழு தேர்வு இம்மாநாட்டில் 9 உறுப்பினர்களை கொண்ட உழவர்கரை நகரக்குழுவின் செயலாளராக ஆர்.எம்.ராம்ஜி தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் குருமாம்பேட் வேளாண் அறிவியல் நிலையத்தை அறிவியல் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும். அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்.கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகில் அரசு அமைத்திருக்கும் புதிய பூங்காவிற்கு கவிஞர் தமிழ் ஒளி பூங்கா என்று சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.