புதுச்சேரி, மே 17-
இந்திய மாணவர் சங்கத்தின் அறிவுறுத் தலை தொடர்ந்து, நீட் அல்லாத தொழில், கலை படிப்புகளுக்கு புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2023-24ஆம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழில்படிப்புகள், இளநிலை கலை அறிவியல், வணிகம், நுண் கலை படிப்புகளுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கை புதனன்று (மே 17) துவங்கி ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நீட் அல்லாத தொழில்முறை படிப்பு களான பிடெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், பிபிடி, பிபார்ம், எல்எல்பி, டிப்ளமோ, இளநிலை கலை, அறிவியல், வணிக படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ மற்றும் இளநிலை நுண்கலை படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப் பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் விண்ணப்பத்தை சமர்பிக்க ஜூன் 6ஆம் தேதி கடைசி நாளாகும். தொழில் படிப்புக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ. 1000, கலை, அறிவியல், வணிக படிப்புக்கு ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளி மாணவர்கள் தொழில் படிப்புக்கு ரூ 500, கலை, அறிவியல் படிப்புக்கு ரூ 150 கட்டணம் செலுத்த வேண்டும்.
நீட் அல்லாத தொழில்நுட்ப படிப்பு களுக்கு 5 ஆயிரத்து 229 இடங்களும், கலை அறிவியல், வணிக படிப்புகளுக்கு 4,320 இடங்களும், நுண்கலை படிப்புகளுக்கு 90 இடங்களும், லேட்ரல் என்ட்ரிக்கு 292 இடங்களும் உள்ளன. இதுதவிர மருத்துவம், மருத்துவம் சார்ந்த நீட் மாணவர் சேர்க்கைக்கு 917 இடங்கள் உள்ளன.
பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டின் கீழ் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ஆர்ஐ, என்ஆர்ஐ ஸ்பான்சர், வெளி நாட்டு மாணவர்கள் சென்டாக் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
புதுவை, பிற மாநில விண்ணப்பதாரர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுயநிதி இடஒதுக்கீடுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அனைத்து விபரங்களும் சென்டாக் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு அடுத்தடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இச்சந்திப்பின் போது, அரசு செயலர் ஜவஹர், கல்வித்துறை இயக்குநர் ருத்தராகவுடு ஆகியோர் உடன் இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நீட் அல்லாத கல்லூரி படிப்புகளுக்கான சேர்க்கையை காலம் கடத்தாமல் துவங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்த நிலையில் அரசு சார்பில் சேர்க்கை துவங்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.