districts

img

இந்திய சட்டத்தை மதிக்காமல் செயல்படும் வெளிநாட்டு நிறுவனம் மீது நடவடிக்கை

திருவள்ளூர், பிப்.28- மாண்டன் ஹைட்ராலிக் நிறுவனத்தில் இந்திய நாட்டு தொழிலாளர் நலச் சட்டங் களை அமல்படுத்த மறுக்கும் பட்சத்தில், இந்த தொழிற்சாலையை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும் என சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில்  மாண்டன் ஹைட்ராலிக் என்ற அன்னிய நாட்டு நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த  12 தொழிலாளர்களை சட்ட விரோதமாக பிப் 14 அன்று பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில் பணிநீக்கம்  செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி கடந்த 16 நாட்களாக போராடி வருகின்றனர். இருப்பினும் நிர்வாகம்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் சிஐடியு சார்பில் புதனன்று  (பிப் 28), பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.அர்சுனன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம், மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.வினாயகமூர்த்தி, மாவட்டக்  குழு உறுப்பினர் எஸ்.எம்.அனீப், பொதுத்  தொழிலாளர்கள் சங்கத்தலைவர்  ஏ.நடராஜன், ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். இதில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் பேசுகையில்,  சோழவரத்தில் இயங்கிவரும் ஜெர்மன் நாட்டு நிறுவனமான மாண்டன் ஹைட்ராலிக்  தொழிற்சாலையில் 12 தொழிலாளர்களை திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சட்ட விரோதமாக வெளியேற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது . இது குறித்து சிஐடியு, தொழிலாளர் துறையில் முறையிட்டதின் பெயரில், தொழிலாளர் துறை ஆணையர் தலையிட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அந்த அறிவுறுத்தலை நிர்வாகம் இதுவரை அமல்படுத்தவில்லை. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.  அந்நிய நாட்டு  தொழிற்சாலை அமைக்க நிலம்,  நீர், இலவச  மின்சாரம் தரப்படுகிறது,  எவ்வளவு கொடுத்தும் இந்த நிறுவனம் தொழிலாளர் களின் உழைப்பை சுரண்டி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இந்திய  தொழிலாளர் நல சட்டங்களை அமலாக்க மாட்டோம் என்று சொல்லுவது ஏற்றுக் கொள்ள முடியாது.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்,  வேலை  வழங்க மறுத்தால் அந்த தொழிற்சாலையை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் சிஐடியு நிர்வாகிகள் ஏ.ஜி.சந்தானம், எஸ்.ஏ.கலாம், கே.நடராஜன், ரவி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொன்னேரி கோட்டாச் சிரிடம் இரண்டாவது முறையாக தொழிலாளர்கள் வழங்கினர்.