வேலூர். ஆக 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில் ரூ.46.80 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையைச் சார்ந்த மூன்று பணிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் (ஆக.25) வெள்ளியன்று அடிக்கல் நாட்டினார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் தாழையாத்தம் முதல் சேம்பள்ளி ரோடு வரை கவுண்டன்யா மகாநதியின் வலது கரையில் ரூ.30.19 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, கெங்கையம்மன் கோயில் அருகில் கவுண்டன்யா மகாநதியின் குறுக்கே ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் நீர்வழி போக்கிகளுடன் கூடிய தரைப்பாலம் அமைக்கும் பணி மற்றும் கௌண்டன்யா மகாநதியின் இடது கரையில் ரூ.2.91 கோடி மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் மழைக்காலங்களில் அருகாமையில் உள்ள மழைநீர் ஆற்றிற்கு வருவதற்கு ஏதுவாக 5 இடங்களில் உள்வாங்கி வடிகால் அமைக்கப்படவுள்ளது. இப்பணியினால் குடியாத்தம் நகர போக்குவரத்து நெரிசல்கள் தவிர்ப்பதோடு. குடியாத்தம் நகரம் மேம்பாடு அடைவதற்கும், ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் வந்தாலும் நகர மக்களுக்கு பாதிப்பு ஏதும் வராமல் தவிர்க்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் பேசுகையில் குடியாத்தம் நகரில் சரியான கழிவு நீர் வசதி இல்லை. கழிவு நீர் வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அடுத்தடுத்த காலங்களில் தொடங்கப்படும் என்றார். பல வருடங்களுக்கு முன்பு இந்த கவுண்டன்ய மகாநதியில் தண்ணீர் சுத்தமான தண்ணீராக இருந்தது. தற்போது மேற்கொள்ளப்படும் இந்த பணிகளின் காரணமாக விரைவில் அது போன்ற சுத்தமான தெளிவான நீர் பாய்ந்தோடும் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.