சென்னை, டிச.24- ஸ்கேட் போர்டில் நின்று வளையம் சுற்றும் விளையாட்டில் உலக சாதனை நிகழ்த்திய சிறுமிக்கு சாதனையாளர் சான்று வழங்கப்பட்டது. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ராமானுஜர் அரங்கத்தில், உலக சாதனை நிகழ்த்தியவர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று (டிச.22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட் போர்டில் நின்று 4 நிமிடம் 25 வினாடிகளில் 463 முறை வளையம் சுற்றும் விளையாட்டில் உலக சாதனை படைத்த சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி நிவிஷா ஸ்ரீ (5) என்பவருக்கு சாதனையாளர் சான்று வழங்கப்பட்டது. சென்னை ராபா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட உலக சாதனை சான்றை, நிறுவனர் சேவா ரத்னா ராமானுஜம் பிரசன்னா, மேலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் வழங்கினர். உலக சாதனை நிகழ்த்திய சிறுமி, நிவிஷா ஸ்ரீ, டிச.4 முதல் 8 ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகளில், தமிழகம் சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.