districts

செங்கல்பட்டில் ரூ.40 கோடியில் பிரமாண்ட பேருந்து நிலையம்

செங்கல்பட்டு, செப். 18- செங்கல்பட்டு பகுதி தற்போது அதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை தாண்டி இப்போது செங்கல்பட்டு பகுதியில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  சென்னைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மின்சார ரயில் சேவை உள்ளது செங்கல்பட்டு பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது.  தற்போது செங்கல்பட்டு பேருந்து நிலையம் ஜி.எஸ்.டி.சாலையை ஒட்டி ரயில் நிலையம் அருகே உள்ளது. அங்கிருந்து மதுராந்தகம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தாம்பரம், அச்சரப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதிய இடவசதி இல்லாததால், வாகன பெருக்கம் காரணமாகவும் செங்கல்பட்டு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  இதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெம்பாக்கம் பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு  செய்யப்பட்டுள்ளது. இங்கு சுமார் ரூ.40 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கிறது.  இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. பேருந்து நிலைய பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  புதிய பேருந்து  நிலையத்தில் ஒரே  நேரத்தில் சுமார் 50 பேருந்துகள் நிறுத்தும்  வகையில், சுமார் 67 நான்கு சக்கர வாகனங் கள், 782 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும்  வகையில் பார்க்கிங் பகுதி அமைய இருக்கிறது. மேலும் 30 கடைகள், ஓட்டல்கள்,  பெரிய வளாகம், சுற்றுலா தகவல் மையம்,  டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வு எடுக்கும்  அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட இருக்கிறது.  

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், செங்கல்பட்டு நகரின் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. நிலம் கையகப்படுத்தும் செலவு திட்டத்திற்கு அதிகமாக இருப்பதால், சாலையை விரிவாக்கம் செய்ய முடியாது. எனவே,  புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய  பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார். செங்கல் பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையம் மாற்றலாகி வெம்பாக்கம் பகுதிக்கு பேருந்து நிலையம் மாற்றப்படும். பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நகர பேருந்து வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ரயில்வே குடியிருப்பில் உள்ள ஒரு பகுதியும் மற்றும் அருகில் உள்ள சில  பகுதிகளை அப்புறப்படுத்தி நகர பேருந்து ரயில் நிலையத்தில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் படி பணிகள் நடைபெற்று வருகின்றன.