சென்னை, நவ. 11- சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள கிழக்கு மாட வீதியுடன் இணையும் தேவர் தெரு, மண்ணடி தெரு மற்றும் சந்திப்பு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டன. மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் இணைப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்த நிலையிலும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் தினசரி விபத்து ஏற்படுவதுடன், போக்கு வரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பொதுமக்கள், ஐசிஎப் தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாலையை தினசரி பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டாக்டர் அம்பேத்கர் சாலை மேம்பால பணிக்காக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.