districts

img

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 4 பேர் அவதி: உணவக சமையலறைக்கு சீல்

கடலூர், செப்.20- கடலூரில் "சிக்கன் ஃப்ரைட் ரைஸ்" சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உணவகத்தின் சமையல் அறைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலூர் கடற்கரை சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள அசைவ உணவகத்தில் சிக்கன் துரிதஉணவு  மற்றும் தந்தூரி சிக்கன் பார்சல் வாங்கி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாப்பிட்டுள்ளனர். கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த அவர்கள் அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி  ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கடலூர் உணவு  பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு புகார் சென்றதை தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர்  கைலாஷ் குமார்  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சந்திரசேகரன், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது உணவகத்தின் சமையல் கூடத்தில் காலாவதியான மசாலா பொருட்கள், வியாழனன்று சமைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் குழம்பு உள்ளதை அறிந்து அங்கிருந்து நூடுல்ஸ், பிரைட் ரைஸ்  ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் அங்கிருந்து காலாவதியான மசாலா பொருட்களை கைப்பற்றிய அவர்கள் அந்த உணவகத்தின் சமையல் கூடத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.  மாதிரி முடிவு கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.