districts

சென்னை முக்கிய செய்திகள்

மாணவிக்கு பாலியல் கொடுமை: குறும்பட இயக்குநருக்கு  20 ஆண்டுகள் சிறை

சென்னை, ஆக. 31- சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரவாயலை சேர்ந்த சத்தியபிரகாஷ் (37) என்ற குறும்பட இயக்குநர், சென்னையை சேர்ந்த பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பழகியுள்ளார். சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, நடிப்பு பயிற்சி அளிப்பதாக கூறி, வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுசம்பந்தமாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், 2021ஆம் ஆண்டு சத்திய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ராஜலட்சுமி வியாழனன்று (ஆக. 31) தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் சத்தியபிரகாசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். மேலும் அபராத தொகையில் 55 ஆயிரம் ரூபாயை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, உடல் மற்றும் மன ரீதியான பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

குறுஞ்செய்தி மூலம் புதிய மோசடி: காவல்துறை எச்சரிக்கை

சென்னை, ஆக. 31- இ சலான் மோசடியை சைபர் மோசடி கும்பல் தொடங்கி இருப்பதாக சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரை போன்று குறுஞ்செய்தி அனுப்பி கும்பல் பணம் மோசடி செய்வது தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக அபராதம் விதிக்கும் காவல்துறையினர் “echallan.parivahan.gov.in”. என்ற இணையதள முகவரியையே பயன்படுத்துவார்கள். சைபர் மோசடி கும்பல் https://echallanparivahan.in/ என்ற மோசடி இணையதளத்தின் மூலமாகவும் தனியாக இ-மெயில் மற்றும் பணம் செலுத்துமாறு கூறி மோசடி செய்வதாக சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே போக்குவரத்து அபராதம் விதிக்கும்படி குறுஞ்செய்தி வந்தால் அதை சரி பார்த்து காவல்துறை அபராதம் விதித்துள்ளதா, அதிகாரப்பூர்வ அபராதம் செலுத்தும் இணையதளமா என சரி பார்த்து பொதுமக்கள் பணத்தை செலுத்துமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.

யானை மிதித்து பெண் பலி

வேலூர், ஆக. 31 - ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குடிபலா பகுதியில் சுற்றி திரிந்து வந்த ஒற்றை ஆண் காட்டு யானை புதனன்று ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த செல்வி மற்றும் வெங்கடேசன் தம்பதியரை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் சித்தூர் மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த யானை வேலூர் மாவட்டம் பொன்னை அருகே நுழைந்தது. இந்நிலையில் வியாழனன்று (ஆக. 31) அதிகாலை வேலூர் மாவட்டம் மேல்பாடி அடுத்த பெரிய போடி நத்தம் கிராமத்தை சேர்ந்த மலை அடிவாரத்தில் வசித்த வசந்தா (55) தனது வீட்டுக்கு வெளியே ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்த போது, அங்கி ருந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக தாக்கியதில் வசந்தா பலியானார். மேலும் அவரது பட்டியில் இருந்த ஆடு களையும் மிதித்து கொன்றது. தகவல் அறிந்து வந்த மேல்பாடி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிராம மக்கள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை கண்காணித்து காட்டுக்குள் விரட்டி மீண்டும் ஊருக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வனத்துறையினரோடு தற்போது ஆந்திர வனத்துறை யினரும் ஒற்றை யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊர் கட்டுப்பாடு: 9 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ள கிராமம்

கிருஷ்ணகிரி, ஆக. 31- போச்சம்பள்ளி அருகே ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு குடும்பத்தை 9 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வாணிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன், அவரது தம்பி சசிக்குமார் ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு கோயில் நிலம் தொடர்பான மோதலில், காயமுற்ற உறவினர்களுக்கு இவர்கள் ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து, ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒதுக்கி வைத்துள்ள தாகவும், இக்கொடுமை 9 ஆண்டுகளாக நீடிப்பதாகவும் கிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். ஊர் கட்டுப்பாடு எனக்கூறி, அண்ணன், தம்பி இருவரையும் யாரும் திருமணம் செய்யக்கூடாது என தடுத்துள்ளதாகவும், பிற கிராமத்தினரையும் தங்கள் குடும்பத்துடன் சம்மந்தம் வைக்கக் கூடாது என தடுத்து வருவதாகவும் சசிகுமார் புகார் தெரிவித்துள்ளார். இதனால் 50 வயதை நெருங்கிய அண்ணன் கிருஷ்ண னுக்கும் திருமணம் ஆகவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

10 வீடுகளில் மின் சாதனங்கள் பழுது

ஆம்பூர், ஆக. 31- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதுப்பட்டு ஊராட்சி பச்சக்குப்பம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட அதிக மின் அழுத்தம் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் பழுதானது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் அதிக மின்னழுத்தம் வந்ததற்கான காரணத்தை கண்டறிந்து மின் கோளாறை சரி செய்தனர்.

சாலை விபத்தில் பெண் பலி

கிருஷ்ணகிரி, ஆக. 31- திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரி (34) என்பவர் ஓசூரில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் மத்திகிரி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த ஜே.சி.பி. வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மத்திகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கடலூர், ஆக. 31- பண்ருட்டி எல்.என்.புரம் குமரன் நகர் 6ஆவது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி புஷ்பலதா (51). இவர்களது 2ஆவது மகன் அஸ்வின்குமார். இவ ருக்கு வரும் 17ஆம் தேதி திருமணம் நடைபெறு வதையொட்டி உறவினர்கள் வீட்டிற்கு பத்திரிகை வைக்க அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற னர். மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின்  பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த னர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இது குறித்து ரவிச்சந்திரன் பண்ருட்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.