திருவண்ணாமலை, செப்.18- கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை எடுப்பதற்கு ஒரே நேரத்தில் வங்கிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று திரு வண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் துவக்க நாள் செப்.15 அன்றே பயனாளிகளின் வங்கி கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்ட வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது. இதனை சரி செய்து, வங்கி கணக்குகளுக்கு விரைவில் உரிமை தொகை வரவு வைக்க அரசின் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மணி யார்டர் மூலம் தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. தொகை வரவு வைக்கப்படும். சில மகளிர்கள் உரிமை தொகை வரவு வைத்த அன்றே உடனடியாக வங்கியில் இருந்து தொகையை எடுக்க வேண்டும் என்ற தவறான புரிதல் காரணமாக ஒரே நேரத்தில் வங்கிக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வரப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். வரவு வைக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட பயனாளி கள் எடுக்கும் வரை அவர்களின் வங்கி கணக்கிலேயே தொடர்ந்து இருக்கும். எக்காரணத்தை கொண்டும் எடுக்கப்படாது. பயனாளிகள் தங்கள் தேவை அல்லது விரும்பும் வரை தொகையை வங்கி கணக்கில் வைத்திருக்கும் என்பதால் உரிமை தொகை பெற்ற மகளிர்கள் ஒரே நேரத்தில் வங்கிக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் உரிமை தொகையை வங்கிகள் சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகிய காரணங்களுக்காக திட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக சில வங்கி கள் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், முதல்வரின் முகவரி உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண்ணில்(1100) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.