விழுப்புரம், ஜூன் 16- பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜாக்கோப் மெல்கி எத்தேன் (25). இவர் விழுப்புரத்திலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்திச்சென்று பாலியல் வனகொடுமை செய்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஜாக்கோப் மெல்கி எத்தேன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஜாக்கோப் மெல்கி எத்தேனிற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கடத்திச்சென்ற குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜாக்கோப் மெல்கி எத்தேன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.