சிவகங்கை, ஜூன் 21- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்டதேவி கிராமத்தில் ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் அனைத்து சமூக மக்கள் பங்கேற்புடன் ஜூன் 21 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தேவஸ்தானம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய தேரோட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஜெயராமன், தென்மண்டல காவல்துறை தலைவர் டாக்டர். கண்ணன் மற்றும் காவல்துறை துணைத் தலைவர் (சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்) துரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, சிவகங்கை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன், சிவகங்கை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் என்.பழனிக்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலானது இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் கோவிலாகும்.
இத்திருக்கோயிலானது தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி நாடுகள் எனும் பகுதிகளுக்கு கீழ் உள்ள கிராம மக்களுக்கான தலைமை கோயில் ஆகும். இத்திருவிழாவில், எவ்வித பாகுபாடின்றி தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெறும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஒருங்கிணைப்புக் கூட்டமானது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 09.11.2023 அன்று அனைத்து தரப்பினர்களைக் கொண்டு நடத்தப்பட்டு 11.02.2024 அன்று திருத்தேர் வெள்ளோட்டமானது நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இவ்வருடம் ஆனி திருவிழாவானது ஜூன் 13 அன்று துவங்கி ஜூன் 22 அன்று நிறைவடைகிறது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமானது ஜூன் 21 அன்று காலை 6.40 மணிக்கு சிறப்பாக துவங்கப்பட்டு, 8 மணியளவில் நிறைவடைந்தது. 2006-ஆம் ஆண்டிற்கு பின்பு 17 வருடங்கள் கடந்து திருத்தேரோட்டமானது, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான வழிகாட்டுதலின்படி, இனிதே நடைபெற்றுள்ளது. இத்திருத்தேரோட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
உயர்நீதிமன்ற ரிட் மனுக்கள் 13236 மற்றும் 13099/2024 மீதான 20.06.2024 தேதிய பொதுவான உத்தரவின்படி, நான்கு நாட்டார்களில் உஞ்ஜனை மற்றும் செம்பொன்மாரி நாட்டார்கள் தரப்பில் அவர்களுக்கான மரியாதையினை பெற்றுக்கொண்டனர். தென்னிலை மற்றும் இறகுசேரி நாட்டார்கள் சார்பில் சிவகங்கை தேவஸ்தானம் மரியாதையினை பெற்றுக்கொண்டனர்.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட திருவிழா இதேபோன்று, மேலும் சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.