சேலம், ஜுலை 20- வெள்ளித்தொழிலை பாதுகாத்திட ஆன்லைன் வர்த்தகத்தை தடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகர 3 ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது. வாலிபர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகர மாநாடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சௌடாம்பிகா மஹாலில் நடைபெற்றது. மாநகர தலைவர் பி.சதீஷ்குமார் கொடியேற்றினார். மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார். செயலாளர் குருபிரசன்னா வேலை அறிக்கையும், பொருளாளர் மனோகரன் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். இதில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா பூங்காவை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண் டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சியில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளையை தடுத்திட வேண்டும்.
சேலம் மாநகர பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் புழக்கத்தை தடுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக நியாயமாக போராடியவர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்திட வேண்டும். சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வெள்ளி தொழிலை பாதுகாத்திட வெள்ளி கச்சா பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து நீக்கிட வேண்டும். வெள்ளி பட்டறை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு மாநகர தலைவராக கே.ராமச்சந்திரன், செயலாளராக ஆர்.குருபிரசன்னா, பொருளாளராக டி.மனோகரன் உள்ளிட்டு 16 பேர் கொண்ட மாநகர வடக்கு குழு தேர்வு செய்யபட்டது. மாநாட்டை நிறைவு செய்து சேலம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.வெங்கடேஷ் நிறைவுறையாற்றினார். முன்னதாக ஆலமரக்காடு பகுதியிலிருந்து வாலிபர் சங்க பேரணி வீரபாண்டியார் நகர் வழியாக மாநாட்டு திடலை அடைந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.