தாராபுரம், ஜன.19- அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் தொடரும் உயிர்பலியை தடுக்கும் விதமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் -ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆச்சியூர் பிரிவு அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தின் கீழ் இருபுறமும் குளிக்க செல்பவர்களில் பலர் புதை மணலில் சிக்கி உயிர் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பாதயாத்திரை சென்ற பள்ளி மாணவர் குளிக்க சென்றபோது சுழலில் சிக்கி உயிரிழந்தார். இதன் சோகம் மறைவதற்குள் கடந்த திங்களன்று திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஆற்றில் குளிக்க சென்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. எனவே, அந்த பகுதியில் உயிர்பலி தொடர்கதையாவதை தடுக்க கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மற்றும் தாராபுரம் காவல்துறை சார்பில் அமராவதி ஆற்றில் பாலத்தை சுற்றி இருபுறமும் அபாய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனை காவல் ஆய்வாளர் மணிகண்டன், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் செல்வி ரமேஷ், துணைத்தலைவர் நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம் மற்றும் ஊராட்சி செயலாளர் பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.