திருப்பூர், பிப்.19- திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி 42 ஆவது வார்டு பாரப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 406 ஆவது வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தொழில் நுட்ப நிபுணர்கள் எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் பழுதை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பழுதான எந்திரத்திற்கு பதில் மற்றொரு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டது. அதன்பிறகு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. வாக்குச்சாவடி பணியாளர்கள் செல்போன் மூலம் டார்ச் அடித்து பணிகளை செய்தனர். சிறிது நேரத்தில் மின் பணியாளர்கள் வந்து மின்வெட்டை சரி செய்தனர். அதன்பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடை பெற்றது.