districts

img

காஞ்சிபுரம் கோயிலில் திருடு போன சிலைகள் மீட்பு: இருவர் கைது !

காஞ்சிபுரம், ஆக 11 - காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் அருகே உள்ள அநேக தங்காவதீஸ்வர் கோயிலில் கடந்த 3ஆம் தேதி கோயிலின் பூட்டை உடைத்து சுமார் 2 அடி உயரம் கொண்ட சிவன் பித்தளை சிலையும், ஒன்றரை அடிக்கொண்ட தலை பார்வதி சிலை மற்றும் கோயில் பூஜை பொருட்களை மர்மநபர்கள் களவாடி சென்றதாக ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளி மற்றும் ஆய்வாளர் ஜெயவேல் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு சிலை களவு தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் சுற்றிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் புதுப்பாளையம் தெருவை சேர்ந்த குமரேசன் மற்றும் சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் திருடியதை ஒப்புக்கொண்டு, சிறுகாவேரிப்பாக்கம் முனீஸ்வரன் கோயில் குளத்தில் மறைத்து வைத்திருந்த சிலைகளை ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது சிவகாஞ்சி காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் முரளி கூறுகையில், இவர்கள் சிறு சிறு திருட்டுகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த சிலைகளையும் அதே நோக்கத்தில் திருடியதாகவும் இவர்கள் மேல் இதற்கு முன் இது போன்ற வழக்குகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.