குற்றாலம் மலைப் பகுதியில் தீ
அரிய மரங்கள், விலங்குகள் தீயில் கருகின
திருநெல்வேலி, மே 5-குற்றாலம் மலைப்பகுதியில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள் சாம்பலாயின. வன விலங்குகள் உயிரிழந்தன.நெல்லை மாவட்டம் பழைய குற்றாலம் மலைப்பகுதியில் சனிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் காட்டுத் தீ மளமளவென மலையின் உச்சி பகுதி வரை வேகமாக பரவியது. இதில் அரியவகை மூலிகைகள், பல்வேறு வகையான காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மேலும் காட்டுத் தீயில் சிக்கிய மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பல தப்பிக்க முடியாமல் உயிரிழந்தன. இரவு நேரத்தில் மலைப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது. குற்றாலம் மலைப்பகுதியில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி
திருநெல்வேலி, மே 5-நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் வேளாண் தொழிலில், அதிக மகசூலுக்காக ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளை நாடும் விவசாயிகள் மத்தியில், முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்து நெல்லைமாவட்டத்தை சேர்ந்த விவசாயி அதிகம் மகசூல் ஈட்டி வருகிறார்.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆலங்குளம் கிராமம் உள்ளது. பெரும்பாலும் வறட்சி நிலவும் இப்பகுதியில், குருசாமி என்னும் விவசாயி மட்டும்10 ஏக்கர் பரப்பளவிலான தனது தோட்டத்தை பசுமை குறையாமல் பராமரித்து வருகிறார்.முழுக்க முழுக்க இயற்கைவிவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், ஜி.டி.நாயுடு, நம்மாழ்வார் ஆகியோரை பார்த்து இயற்கை விவசாயத்தின் பால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.அதிக மகசூலுக்காகவும், பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் பஞ்சகவ்யம்,தொழு உரம், தழைச்சத்து ஆகியவற்றை மட்டுமே பயன் படுத்தி வருகிறார். ஒவ்வொரு செடியின் அடியிலும், கொட்டிக் கிடக்கும் ஆட்டு எருவும், செடியின் மேல் தழைத்து குலுங்கும் காய்களுமே இதற்கு சாட்சியாக உள்ளது.