காற்றினிலே பெருங்காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும் காலமென்னும் கடலிலே சொர்க்கமும் நரகமும் அக்கரையோ இக்கரையோ... என் பள்ளிக்காலத்தில் இலங்கை வானொலியில் இந்தப் பாட்டு ஒலித்தபோதெல்லாம் உன்னிப்பாக கேட்டிருக்கின்றேன். ஏதோ ஒரு வெறுமையும் வெற்றிடமும் சோகமும் இந்தப்பாடல் நெடுக...நெடுக. கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆனது.
பின்னர் சற்று வயது கூடும்போது படத்தை பார்த்தேன். துலாபாரம். முத்துராமன், சாரதா, ஏவிஎம் ராஜன், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், சுருளிராஜன் என பெரிய பட்டாளமே இருந்தார்கள். வாடி தோழி கதாநாயகி, சிரிப்போ இல்லை நடிப்போ, பூஞ்சிட்டு கன்னங்கள் என்று பிற பாடல்கள். 90களில் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டபோது வாயிற்கூட்டங்கள் தொடங்கும் முன் துடிக்கும் ரத்தம் பேசட்டும் துணிந்த நெஞ்சம் நிமிரட்டும் என்ற பாடலை கோன் ஸ்பீக்கரில் (கூம்பு ஒலிப்பெருக்கியில்) ஒலிக்கச் செய்வோம். என்ன ஒரு கம்பீரம்! பாடல் வரிகளும் நரம்பை முறுக்கேற்றும் ராணுவ அணிவகுப்புடன் இசைந்த இசையும்“மூலதனத்தில் பங்குண்டு முடிவில் வெல்லும் அறமுண்டு.... இழந்து போனவை விலங்குகளே எதிரே உள்ளது பொன்னுலகம், இரண்டு வர்க்கம் இனிமேல் இல்லை எழுந்து வாரீர் தோழர்களே!” என்ன இது! அப்படியே மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வரிகள்! மேலே உள்ள அனைத்துப்பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை! படத்தின் கதை தோப்பில் பாசி எழுதியது. பாசி மலையாளத்தில் பெரும் ஆளுமை. நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி என்ற அவரது நாடகம் மிகப்பிரபலம். பல படங்களை இயக்கியுள்ளார். தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபடும் ஒரு தொழிலாளியின் கதை துலாபாரம். மனைவி, மூன்று குழந்தைகள். தொழிற்சாலையில் வேலைநிறுத்தம் நடக்கின்றது. தொழிலாளிகளின் குடும்பங்கள் பட்டினியால் நசிகின்றன. இவனது குழந்தைகள் கடைகளில் சென்று ரொட்டிக்காக கையேந்தும் அளவுக்கு போகின்றது. ஆலை முதலாளி ஆட்களை ஏவி அவனை கொன்று விடுகின்றான். படத்தை ஒரு அளவுக்கு மேல் பார்க்க முடியாது. கொடுமையாக இருக்கும். பிள்ளைகளை அவள் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயல்வாள். நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவாள். படம் குறித்து இப்போதும் விமர்சனங்கள் உண்டு. ஒரு தொழிற்சங்க இயக்கவாதியின் குடும்பம் இந்த அளவுக்கு கொடும் வறுமையில் சிக்கி விடுமா, இத்தனை கோரமான முடிவுக்கு அவன் மனைவி சென்று விடுவாளா, தொழிற்சங்க இயக்கம் குறித்த எதிர்மறையான கண்ணோட்டத்தை இப்படத்தின் கதை ஏற்படுத்தாதா? இப்படியான கேள்விகள் எழும். விடுதலை பெற்ற 1947க்கு பின் ஒரு 13 வருடங்களில், அதாவது 1960களில் அன்றைய காங்கிரஸ் கட்சி, அதன் பலம், மத்தியிலும் இந்தியா எங்கிலும் இருந்த அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் இல்லாத அதன் ஆட்சி, நிலப்பிரபுக்களுடன் சேர்ந்து கொண்டு அக்கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள் மீது ஏவிய அடக்குமுறைகள், களத்தில் நின்று போரடிய கம்யூனிஸ்ட்டுகள் மீது ஏவப்பட்ட கொடும் தாக்குதல்கள், சிறைக்கொடுமைகள், கொலைகள், தொழிற்சங்கத்தை கட்டுவதும் தலைமை தாங்குவதும் எத்தனை பெரிய கடினமான களப்பணி என்ற அரசியல் பின்னணியில்தான் மலையாளத்தில் பாசியின் இக்கதை படமாக்கப்பட்டது என்ற காலச்சூழலை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். கதையை எழுதிய பாசியும் தலைமறைவு வாழ்க்கை நடத்திய கம்யூனிஸ்ட், கட்சியில் உறுப்பினர், போலீஸால் தேடப்பட்டவர், பிடித்துக்கொடுத்தால்1000 ரூபாய் சன்மானம் என்று அறிவிக்கப்பட்டவர் என்று சொன்னால் புரிந்துகொள்வது சுலபம். ... ....
மலையாளத்தில் வயலார் ராமவர்மா எழுதினார், காற்றடிச்சு கொடுங் காற்றடிச்சு... காயலிலே விளக்குமரம் கண்ணடைச்சு சொர்க்கமும் நரகமும் காலமாம் கடலில் அக்கரையோ இக்கரையோ... காற்றினிலே பெருங்காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும் காலமென்னும் கடலிலே சொர்க்கமும் நரகமும் அக்கரையோ இக்கரையோ... இது கண்ணதாசன். எம். பி. சீனிவாசன்தான் கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் என்ற இளைஞனை திரையுலகில் அறிமுகப்படுத்தினார். கோவிந்தன் தேவராஜன் என்ற ஜி தேவராஜன் மலையாள திரையுலகில் மிகப்பெரிய இசைமேதை. அவரது பாடல்களில் பாதிக்கும் மேல் யேசுதாஸ்தான் பாடியுள்ளார். துலாபாரம் மலையாளம், தமிழ் இரண்டுமே ஜி தேவராஜன் இசைதான். காற்றினிலே பெருங்காற்றினிலே என்ற பாடலை வயது கூடக்கூட ஒரு சரணத்துக்கு மேல் கேட்க முடியவில்லை. இரண்டு வர்க்கம் இனிமேல் இல்லை எழுந்து வாரீர் தோழர்களே! காலம் நமதே நமதென்று கதவு திறக்கும் வா இன்று, என்று டேய் தோழா எழுந்து வாடா, வீதிக்கு வா என்று உசுப்பேத்தி நம்பிக்கையின் உச்சியில் ஏற்றி கையில் செங்கொடியை கொடுக்கும் கண்ணதாசன்தான், இந்தப் பாடலில் ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது? தர்மமே மாறுபட்டால் எங்கு செல்வது என்று நம்மை விரக்திக்கடலின் அடியாழத்தில் தள்ளி ‘அடச்சீ, என்னடா கொடுமை இது’ என்று கண்ணீர் சிந்த வைத்து விடுகின்றான். கதவு திறக்கும் வா இன்று... என்று முடிக்கும்போது ட்ரம்பெட் ட்ரம்ஸின் உச்சபட்ச ஒலியில் நம்மை சவாலுக்கு இழுக்கும் ஜி. தேவராஜன், இங்கே வயலினை அழச்செய்து இதயத்தில் ரத்தத்தை சொட்டவைத்து விடுகின்றார். பாடலாகட்டும், இசையாகட்டும், இங்கே கவிஞன் இசையமைப்பாளர் இருவரும் இரண்டு வெவ்வேறு எல்லைகளில் நின்று சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தமது திறனை நிரூபித்து விடுகின்றார்கள். ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது? தர்மமே மாறுபட்டால் எங்கு செல்வது... இந்த வரியில் ஒலிப்பது யேசுதாசின் அவலக் குரல்தான், ஆனால் கடைவீதியில் ஒரு ரொட்டிக்காக கை ஏந்தி நிற்கும் உயிரை இழந்த தொழிற்சங்கவாதியின் கதியில்லாத குழந்தைகள் அங்கே நம் கண் முன்னால் வந்து நின்று ‘எங்க அப்பாவுக்கு நீங்க கொடுத்த பரிசு இதானா?’ என்று கேட்க, அதற்கு மேல் பாடலை கேட்பதும் துயரக்கடலில் வீழ்ந்து சாவதும் ஒன்றென ஆகின்றது. பற்றாக்குறைக்கு இந்த முதல் சரணம் முடியும் இடத்தில் சட்டென வயலின் அழத்தொடங்கிவிடுகின்றது. அழும் வயலினை புல்லாங்குழலும் சேர்ந்து கட்டியணைக்க, என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுவதை எப்போதும் தடுக்க முடிந்ததில்லை. பாடலை நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளேன், தனியே இருந்து அழுதுள்ளேன். தடையின்றி இப்பாடலை முழுமையாக ஒருபோதும் நான் கேட்டதில்லை. நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன்?