கோவை, ஜன.22- கோவை குனியமுத்தூர் பகுதியில் ஐந்து நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை வெள்ளி யன்று நள்ளிரவில் கூண்டிற்குள் வந்தபோது, வன ஊழியர்கள் கூண்டை மூடி சிறுத்தையை உயிருடன் பிடித்தனர். கோவை மாவட்டம், மதுக்கரையொட்டிய வனப்பகுதி யில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளி யேறிய மூன்று வயதேயான ஆண் சிறுத்தை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கியது. இதுகுறித்து தக வலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். குடோனை சுற்றி வலை விரித்தும், 2 வாயில்களிலும் இரண்டு கூண்டுகள் வைத்தும் சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்ட னர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் சிறுத் தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. கூண்டு வைத்து வனத்துறையினர் காத்திருந்த போதிலும், கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் 5 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லா மல் இருந்த சிறுத்தை உணவுக்காக குடோனில் இருந்து வெளியேற முயன்றது. ஆறாவது நாளான வெள்ளியன்று நள்ளிரவு குடோன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டு பகுதிக்கு சிறுத்தை வந்தது. சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர் சிறுத்தை முழுமையாக கூண்டிற்குள் வந்தவுடன் கதவை மூடினர். இதுகுறித்து கோவை மண்டல வன காப்பாளர் ராம சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர் வனத்துறையினரின் செயலை பாராட்டினார். இதனையடுத்து சிறுத்தையை பத்திரமாக வால்பாறை பகுதிக்கு கொண்டு சென்று அடர் வனப் பகுதிக்குள் விட்டனர். மயக்க ஊசி செலுத்தாமல் ஐந்து நாட்களாக பொறுமையுடன் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தபடி இருந்து அதை உயிருடன் பிடித்திருப் பது குறிப்பிடத்தக்கது.