districts

img

கோவை வந்த தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தி!

கோவை வந்த குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்திக்கு மாவட்ட எல்லையில் மேளதாளங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


குடியரசு தினத்திற்காக தில்லியில் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்கள் எனும் தலைப்பில் அலங்கார ஊர்தி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த ஊர்தி தேர்வாகவில்லை என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் காட்சி படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் அதன் பிறகு தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் என அறிவித்தார்.

அதன்படி கடந்த 26ஆம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற அணிவகுப்பில் அந்த அணிவகுப்பு வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அலங்கார ஊர்தியில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி. வீரபாண்டிய கட்ட பொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு அலங்கார ஊர்தி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட அலங்கார ஊர்தி சேலம் வழியாக கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் பகுதிக்கு வந்த அலங்கார ஊர்திக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவியும் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அலங்கார ஊர்தி கோவை வ.உ.சி மைதானத்தில் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்படுகிறது. 

திங்கட்கிழமை காலை கோவையில் இருந்து புறப்பட்டு திருச்சி சாலை மார்க்கமாக திருப்பூர் செல்ல இருக்கிறது.