உதகை, ஜூன் 2- உதகை அருகே கல்லூரி மாணவியின் தற்கொலையில் சந்தேகம் எழுந்த நிலையில், அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவக்குழுவினர் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே தொட்டன்னி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் பிரியதர்ஷினி (19), அவிநாசியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி பிரியதர்ஷினி, கடந்த மே 30 ஆம் தேதியன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், மாணவியின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்நிலையில், மாணவியின் செல்போனை பெற்றோர் ஆய்வு செய்தபோது, சந்தை எழுந்தது. இதுகுறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து உதகை கோட்டாட்சியர் துரைசாமி உத்தரவின்பேரில், வட்டாட்சியர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் அஜய் கான், காவல் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில், மருத்துவக்குழுவினர் மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் வேல்முருகன் கூறுகையில், மாணவியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதால், இயற்கைக்கு மாறான மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ அறிக்கைக்கு பின்னலே முழு தகவல் தெரிய வரும், என்றார்.