ஈரோடு, மார்ச் 3- கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தபால் துறையில் கிராமிய ஊழியர்கள் விடுப்பு எடுப்பதற்கு நியமிக்கப்பட்டு உள்ள விதிமுறைகள் அடங்கிய ஆணையை திரும்ப பெற வேண்டும். தபால் துறையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு கோட்ட தலைவர் எல்.தாமரைசெல்வி தலைமை தாங்கினார். இதில் கிராமிய தபால் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் கே.நடராஜன், பொருளாளர் வி.பி.ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நாமக்கல் நாமக்கல் அஞ்சலக கோட்ட அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சக்திவேல், பொருளாளர் நித்யானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.